என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டில் இருந்து கழிவுநீரை குளத்தில் விட்டால் கடும் நடவடிக்கை
- மேயர் மகேஷ் எச்சரிக்கை
- தூய்மை பணி தொடக்கம்
நாகர்கோவில் :
நாகர்கோவில் அருகே வடக்கு கோணத்தில் அனந்தன் குளம் உள்ளது. இந்த குளத்தில் ஏற்கனவே படகு சவாரி விடப்பட்டு இருந்தது. போதுமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வராததால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த குளத்தில் தற்போது ஏராளமான குப்பைகள் கொட்டப்படுவதாகவும் குடிமகன்கள் தொந்தரவு செய்வதாகவும் மேயர் மகேஷுக்கு புகார் வந்தது. இதையடுத்து கடந்த வாரம் மேயர் மகேஷ் குளத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
அதன்படி இன்று அனந்தன் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுப்பணித்துறை மாநகராட்சி மற்றும் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியது. ஜே.சி.பி. எந்திரம் மூலம் குளத்தின் கரையில் கிடந்த முட்புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டது. இந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள குளங்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அனந்தன் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனில் பொதுமக்கள் யாரும் இந்த குளத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது. வீடுகளில் இருந்து கழிவுகள் விடப்படுவதாகவும் புகார்கள் வந்தது. வீடுகளில் இருந்து கழிவுகளை குளத்தில் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் உறிஞ்சிக்குழாய்கள் அமைக்க வேண்டும். பொதுமக்கள் இந்த பகுதியில் மது அருந்துவதாக புகார் தெரிவித்துள்ளனர். குளத்தின் கரையில் இருந்து பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்தினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் குளத்தில் படகு சவாரி விட வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேயர் மகேஷிடம் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மகேஷ் உறுதி அளித்தார். ஆய்வின்போது நகர்நல அதிகாரி ராம்குமார் பங்குதந்தை சூசை ஆண்டனி, துணை மேயர் மேரி பிரின்சிலதா, கவுன்சிலர் சிஜி பிரவீன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.






