search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது
    X

    திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது

    • சபாநாயகர் அப்பாவு பேச்சு
    • நாகரில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

    நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் சட்டமன்ற நாயகர் கலைஞர் எனும் தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவீதம், உள்ளாட்சியில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலை இருந்தது. மேலும் பெண்கள் அந்த காலகட்டத்தில் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் எந்திரமாகத் தான் இருந்தனர். அப்படிப்பட்ட அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர் தான். காமராஜர், பெரியார், கலைஞர் போன்றவர்கள் பெண்கள் படிப்பதற்கான உரிமையை பெற்றுக் கொடுத்தார்கள். சொத்தில் சம உரிமை என்பதை நிறைவேற்றியவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். அன்றைய காலகட்டத்தில் ஜாதி அடிப்படையில் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டது.

    அய்யா வைகுண்டருக்கு, முடிசூடும் பெருமாள் என்று பெயர் இருந்தது. அதை மாற்றி முத்துக் குட்டி என்று வைத்தார்கள். பேரை கூட மாற்றும் நிலை இருந்தது. மார்பில் துணி அணியக்கூடாது. தலையில் தலைப்பாகை அணியக்கூடாது காலில் செருப்பு அணியக்கூடாது என்ற நிலையை மாற்றி காட்டினார்கள். பெண் கல்விக்காக போராடியவர் கலைஞர். பள்ளிக்கு செல்லும் பெண்களுக்கு உதவி தொகைகளை வழங்கினார். பட்டம் படித்தால் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றார். இதன் மூலமாக தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அடைந்தது.

    இந்தியாவில் 34 சதவீதம் பேர் கல்வி கற்று உள்ளனர். ஆனால் தமிழகத்தில் 51 சதவீதம்பேர் கல்வி கற்று உள்ளனர். பெண்களைப் பொருத்தமட்டில் இந்தியாவில் 26 சதவீதம் பேர் கல்வி கற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தில் 72 சதவீதம் பேர் கல்வி பெற்றுள்ளனர். கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர்கள் பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர்.

    குமரி மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாகும். திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சந்திரயான்-2ஐ விண்ணில் ஏவியவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் தான். இதைத்தொடர்ந்து சந்திராயான்-3ஐ குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் ஏவி மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். தமிழகம் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வியை வளர்க்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட்டு உள்ளது. ஆங்கிலம் சரளமாக பேச அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் விளங்கி வருகிறது.

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 306 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆசிரியராக இருந்த என்னை சட்டமன்ற உறுப்பினராக்கி. சட்டமன்ற தலைவராக்கி, ஆசிரியர் குலத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். காமராஜர் மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக கல்வி கண் திறந்தார். ஆட்சியில் இருந்த 9 ஆண்டுகளில் 27 ஆயிரம் பள்ளிகளை திறந்து பெருமை சேர்த்தார். கடந்த ஆண்டு கல்லூரிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த கட்டிடங்களுக்கு காமராஜர் பேரிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள கல்விக் கொள்கை தமிழக மக்களுக்கு எதிரானதாகும். இந்தியாவில் தற்பொழுது 704 மருத்துவ கல்லூரிகள் உள்ளது. தமிழகத்தில் 74 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 11 ஆயிரம் பேர் மருத்துவம் படித்து வருகிறார்கள். மத்திய அரசு மீண்டும் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர பார்க்கிறது.

    புதிய கல்விக் கொள்கையால், நீட் தேர்வு போலவே கல்லூரிகளிலும் மேற்படிப்பு படிக்க நுழைவுத் தேர்வு வேண்டிய நிலை வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலைஞர் நூற்றாண்டு குறித்து பேசினார்கள். மேயர் மகேஷ், முன்னாள் சட்டப்பேரவை செயலாளர் செல்வராஜ், தலைவர் ஆவுடையப்பன்,குமரி மாவட்ட கோவில்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபாராமகிருஷ்ணன், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், எஸ்.எல்.பி. பள்ளி தலைமை ஆசிரியை ஜமீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×