search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மார்க்கெட்டில் வெள்ளரிக்காய் கிலோ ரூ.100-க்கு விற்பனை
    X

    நாகர்கோவில் மார்க்கெட்டில் வெள்ளரிக்காய் கிலோ ரூ.100-க்கு விற்பனை

    • புடலங்காய், தக்காளி விலையும் உயர்ந்தது
    • தற்போது ரூ.3500 முதல் ரூ.4000-க்கு வரை விற்பனை ஆகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட் கனகமூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மற்றும் மேட்டுப்பாளையம், ஓசூர், திண்டுக்கல் பகுதிகளிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

    காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக வெள்ளரிக்காய், புடலங்காயின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்டத்தில் இருந்தும் வெள்ளரிக்காய் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக வெள்ளரிக்காய் உற்பத்தி குறைந்துள்ளது.

    வெள்ளரிக்காயின் வரத்தை குறைய தொடங்கியதையடுத்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூ.20-க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து கடந்த வாரம் கிலோ ரூ.50 ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூ.100-க்கு விற்பனையா னது.

    வெள்ளரிக்காய் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அப்டா மார்க்கெட்டில் ஒரு மூடை வெள்ளாரிக்காய் சில நாட்களுக்கு முன்பு ரூ.300 முதல் ரூ.400-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.3500 முதல் ரூ.4000-க்கு வரை விற்பனை ஆகிறது. இதேபோல் புடலங்காய் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

    மழை காரணமாக புடலை செடிகள் சேதமடைந்ததையடுத்து காய்கறிகளின் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. புடலங்காய் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் தக்காளியின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

    ஒரு கிலோ தக்காளி கடந்த வாரம் ரூ.25-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.50-க்கு விற்பனையானது. இதேபோல் சிறிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. சிறிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதையடுத்து விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ சிறிய வெங்காயம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிலோ ரூ.40 உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பீன்ஸ், சேனை விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

    நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறி களின் விலை விவரம் வருமாறு:-

    வெள்ளரிக்காய் ரூ.100, புடலங்காய் ரூ.70, இளவங்காய் ரூ.40, சேனை ரூ.85, தக்காளி ரூ.55, பல்லாரி ரூ.60, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.60, சிறிய வெங்காயம் ரூ.120, கத்தரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.60, இஞ்சி ரூ.160 பூடு ரூ.300, மிளகாய் ரூ.70, பூசணிக்காய் ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.30, வெண்டைக்காய் ரூ.20-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தற்பொழுது காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் சைவ உணவே சாப்பிட்டு வருகிறார்கள். இதனால் காய்கறிகள் அதிகம் தேவைப்படுகிறது. காய்கறிகள் தேவை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வரத்து குறைவாக உள்ளதால் வழக்கத்தைவிட விலை உயர்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் காய்கறிகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார்.

    Next Story
    ×