search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மண் எண்ணை ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி
    X

    நாகர்கோவிலில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மண் எண்ணை ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி

    • அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை கேட்டு விபரீதம்
    • ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போலீசார் சிகிச்சை அளித்தனர்

    நாகர்கோவில் :

    மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திங்கட் கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் ஏராளமானோர் பங்கேற்று மனுக்கள் கொடுத்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் மனுக்களை பெற்றார்.

    மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராள மானோர் மனுக்களுடன் வந்திருந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக வாசலில் போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுப்பினர்.

    இந்த நிலையில் கலெக்டர் மனுக்கள் வாங்கிய மாடிக்கு வந்த ஒரு பெண், திடீரென தனது உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவம் அங்கு பரபரப்ைப ஏற்படுத்தியது. இதனை கண்டு மனு கொடுக்க வந்த பலரும் கூச்சலிட்டனர்.

    இதனைக் கேட்டு கலெக்டர் அலுவலக ஊழியர்களும், அங்கு நின்றவர்களும் விரைந்து செயல்பட்டனர். உடலில் மண் எண்ணை ஊற்றிய பெண்ணை அவர்கள் மடக்கிப் பிடித்தனர். இது பற்றி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து அந்தப் பெண்ணை மீட்டனர். பின்னர் அவர் மீது குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். தொடர்ந்து அவர் தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவரது பெயர் ஷீலா(வயது 45) என்பதும், மணலோடை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கணவர் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், அங்கன்வாடியில் தான் பணியாற்றியதாகவும், அங்கு சிலர் தன்னை தவறாக பேசியதால் மன வேதனை அடைந்ததாகவும் இதற்கு நீதி கேட்டே தற்கொலைக்கு முயன்றதாகவும் ஷீலா தெரிவித்தார்.

    போலீசாரின் விசாரணையில் ஷீலா ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போலீசார் சிகிச்சை அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×