search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
    X

    ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

    அணுகு சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை.

    கன்னியாகுமரி:

    108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றானதும் நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருத்தலமும் ஆகிய திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் 400 ஆண்டுகளுக்குப்பின்னர் வரும் ஜூலை மாதம் 6ந்தேதி சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது.

    இதையொட்டி மூலவர் சிலை புதுப்பிக்கும் பணி, மீயூரல் ஓவியங்கள் சீரமைக்கும் பணி, மடப்பள்ளி சீரமைப்பு பணி ஆகியன நடந்து வருகிறது. கோயில் பிரகாரத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி முடிவடைந்து விட்டது.

    கோயில் வெளிப்பிரகார பாதையில் போடப்பட்டிருந்த கற்கள் வழுக்கும் தன்மையுடன் இருந்ததால் அவற்றை மாற்றுவதற்கு மோட்டார் உதவியுடன் சாதாரண கல்லாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

    தேவபிரசன்னம் பார்க்கப்பட்டபோது பல்வேறு பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் எனகூறப்பட்டது. அதன்படி பூஜைகள் பெரும்பாலானவை நிறைவடைந்து விட்டது.

    பிரகாரங்களில் வர்ணம் பூசும்பணி நடந்து வருகிறது. கோவில் கருவறையின் மேல்பகுதி விமானம் சுத்தப்படுத்தி அதன் மீது அஷ்டபந்தன காவி பூசும் பணி நேற்று துவங்கியது. இதற்காக ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வருகிற 29-ந்தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் ஆரம்பமாகிறது. ஜூன் 30.ந்தேதி பாலாலயத்தில் பூஜையில் இருக்கும் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் கருவறைக்கு ஏழு ஆண்டுகளுக்குப்பின்னர் எடுத்துச்செல்லப்படுகிறது. தொடர்ந்து அங்கு பூஜைகள் நடைபெறும்.

    ஜூலை மாதம் 5.ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெறும். 6-ந்தேதி காலை 5.10 முதல் 5.50 மணி வரை ஜீவகலச அபிஷேகம், காலை 6.00 மணி முதல் 6.50க்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறும். மேலும் குலசேகரப்பெருமாள் கோயில், திருவம்பாடி கிருஷ்ணசாமி சன்னதி, தர்மசாஸ்தா சன்னதியிலும் கும்பாபிஷேகம் நடைபெறும்.

    ஜூலை 9.ந்தேதி தங்கக்கொடிமர பிரதிஷ்டை நடைபெறும். திருவட்டார் பஸ்நிலையம் முதல் நான்கு முனை அணுகு சாலையில் இருந்து கோயிலுக்கு செல்லும் சாலை குண்டு குழிகளுடன், இருபுறமும் புதர்கள் மண்டி மோசமான நிலையில் உள்ளது.

    அதுபோல் திருவட்டார் சந்தை அருகே ஈனாச்சி அம்மன் கோயிலிருந்து ஆதி கேசவ பெருமாள் கோவில் வரையுள்ள அணுகு சாலையும் குண்டு குழிகளுடன் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலைகளை செப்பனிட்டால் தான் கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வரமுடியும்.

    கும்பாபிஷேகத்திற்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த அணுகு சாலைகளை விரைந்து செப்பனிட அதிகாரிகள் முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×