search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரியில் இன்று 2 மாடி கட்டிடத்தில் தீ விபத்து
    X

    வடசேரியில் இன்று 2 மாடி கட்டிடத்தில் தீ விபத்து

    • தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் விரைந்து வந்தனர்
    • 2 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோட்டில் 2 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. கட்டிடத்தின் தரை தளத்தில் சமையல் பொடி விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. முதல் மற்றும் 2-வது மாடிகளில் கடைகள் எதுவும் இல்லாததால் காலியாக இருந்தது.

    இந்த நிலையில் கட்டிடத்தின் 2-வது மாடியில் இன்று காலை 11.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள பொருட்கள் தீயில் எரிந்து குபு...குபு...வென புகை வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய உதவி அதிகாரி துரை மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதால் தரைத்தளத்தில் செயல்பட்டு வந்த கடையை உடனடியாக அடைத்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன.

    அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மேலும் சாலையில் வாகனங்கள் செல்லாதபடி சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீசார் அடைத்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் யாரும் இல்லாததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தீ விபத்து காரணமாக அசம்பு ரோட்டில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    அசம்பு ரோட்டில் 2 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×