search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வில்லுக்குறியில் மழைநீர் ஓடையில் விழுந்த 2-ம் வகுப்பு மாணவன் படுகாயம்
    X

    வில்லுக்குறியில் மழைநீர் ஓடையில் விழுந்த 2-ம் வகுப்பு மாணவன் படுகாயம்

    • பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வர்த்தகர்கள் போராட்டம் அறிவிப்பு
    • மழைநீர் ஓடையை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

    இரணியல் :

    குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜாண் ஜோசப். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் இவரது மனைவி ஜோஸ்பின் வல்ஷா, தனது 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் பெருவிளையில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது மகன் ஆஷிக் (வயது 7) மாடத்தட்டுவிளையில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை அழைத்து வர ஜோஸ்பின் வல்ஷா சென்றார்.

    அந்த நேரத்தில் வில்லுக்குறியில் பெய்த கன மழையால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. மாடத்தட்டுவிளையில் இருந்து வில்லுக்குறி வரும் சாலை ஓரம் கட்டப்பட்டுள்ள மழை நீர் ஓடை வழியாக மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனை கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக ஆஷிக், மழைநீர் ஓடைக்குள் விழுந்தார். அவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்து ஜோஸ்பின் வல்ஷா அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் ஆஷிக், நெடுஞ்சாலைக்கு அடியில் உள்ள ஓடைக்குள் சிக்கி கொண்டான். உடனடியாக மாணவனை மீட்க ஓடையில் சிலர் இறங்கி தேடினார். மறுபக்கமும் இளைஞர்கள் சிலர் சென்று தேடினர். அப்போது நெடுஞ்சாலைக்கு அடியில் போடப்பட்டுள்ள மடையை தாண்டி ஆஷிக் வெளியே வந்தான். உடனடியாக அவனை மீட்ட இளைஞர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மாணவன் ஆஷிக் சேர்க்கப்பட்டான். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஷிக் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தொழில் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எம் முருகன், செயலாளர் பூக்கடை முருகன், பொருளாளர் மார்ட்டின் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் கூறும்போது; மாணவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என குற்றம் சாட்டினர். தேசிய நெடுஞ்சாலைக்கு அடியில் போடப்பட்டுள்ள மழை நீர் ஓடை மடையில் 3-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் போடப்பட்டுள்ளன.

    இதனால் இந்த குழாய்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் சிக்கி மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. ஆஷிக் இதில் சிக்கியதாலே உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் ஓடையை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேரூர் நிர்வாகம் முன்பு கண்டன போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். 2-ம் வகுப்பு பள்ளி மாணவன் மழை நீர் ஓடையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×