search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், ரூ.3 லட்சம் மதிப்பு செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்
    X

    மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் ஒப்படைத்தார்.

    தஞ்சையில், ரூ.3 லட்சம் மதிப்பு செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்

    • சில செல்போன்களை கீழே கிடந்ததாக கூறி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ,சைபர் கிரைம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குபேந்திரன், காவலர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்களை கண்டுபிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் தேடும் பணியை தொடங்கினர். மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்கள் தஞ்சாவூர் நகரம் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் சில செல்போன்களை கீழே கிடந்ததாக கூறி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கடைகளில் விற்பனைக்கு இருந்த செல்போன் ஐ.எம்.இ.ஐ எண்ணையும், புகார் கொடுத்திருந்த ஐ.எம்.இ.ஐ எண்ணையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்து கடை உரிமையாளரிடம் இருந்து அந்த செல்போன்களை மீட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது செல்போனை விற்க வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    வெளியூரில் கண்டுபிடிக்கப்பட்ட சில செல்போன்கள் அவர்களாகவே கொரியர் மூலம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி விட்டனர்.

    இவ்வாறாக பொதுமக்களால் தவறவிட்டு, புகார் பெற்று ரூ.3 லட்சம் மதிப்புள்ள 25 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இன்று அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் , சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். அப்போது அவர் செல்போன்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

    Next Story
    ×