

தஞ்சாவூர்:
சென்னையில் உள்ள திரையரங்கில் புதிய படம் பார்க்க சென்ற நரிக்குறவர் இன மக்கள் நுழைவுச்சீட்டு இருந்தும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இது சர்ச்சையானது.
இந்நிலையில், தஞ்சை நகர பகுதிகளில் வாழும் சுமார் 55 நரிக்குறவர்கள் நேற்று வெளியான புதிய படத்தை திரையரங்கத்தில் கட்டண முதல் வகுப்பில் அமர்ந்து பார்க்க ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில்:-
உரிய நுழைவுச்சீட்டு இருந்தும் நரிக்குறவர் இன மக்கள் சென்னை திரையரங்க வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டது வருத்தத்துக்குரியது.
அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நரிக்குறவர் இன மக்களுடன் ஒன்றாக அமர்ந்து தஞ்சை நகர பொதுமக்கள் திரையங்கத்தில் திரைப்படம் பார்க்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை திரையரங்கத்தில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்பதே அனைவரின் விருப்பம் என்றனர்.
ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.