என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சுவாமி கோவில் தேரோட்டம்
- நினைத்தது நிறைவேற வேண்டி வாழைப்பழத்தில் தவணை இலை அருகம்புல் சுற்றி தேரின் மீது எறிந்தனர்.
- நகர மெங்கும் அன்னதானம், நீர்மோர், பானகம், பாசிப்பருப்பு ஆகியவை தேர் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள ஸ்ரீ சவுந்தரவல்லி சமேத ஸ்ரீ பேட்டராய் சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமான வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
பழமையும் சிறப்புமிக்க இந்தக் கோவிலின் தேர் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தேர் திருவிழா நிகழ்ச்சிகள் கல்யாண உற்சவத்துடன் தொடங்கி கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், அம்சவாசன உற்சவம் நடைபெற்றது. நேற்று இரவு திங்கள்கிழமை 9 மணிக்கு கஜேந்திர மோக்ஷம் என்ற ராமபாணம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தளி எம்.எல்.ஏ ராமசந்திரன், ஒசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ், தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
முதலில் சவுந்தரவல்லி தாயார் தேரை இழுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி பேட்டராய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு 5 அடுக்கு தேரில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து வேத மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி கோஷத்துடன் கோஷங்களை முழங்கினார்கள் விழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்தது நிறைவேற வேண்டி வாழைப்பழத்தில் தவணை இலை அருகம்புல் சுற்றி தேரின் மீது எறிந்தனர்.
மேலும் தங்களின் விளை நிலங்களில் தானியங்கள் நன்கு விளையும் வேண்டும் என வேண்டிக் கொண்டு தேரின் மீது நவதானியங்களை எறிந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
தேன்கனிக்கோட்டை நகர மெங்கும் அன்னதானம், நீர்மோர், பானகம், பாசிப்பருப்பு ஆகியவை தேர் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் தேன்கனிக் கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் கர்நாடக, ஆந்திர மாநில இருந்தும் பல்லா யிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்று இரவு சம்பூர்ண இராமாயணம் நாடகம் நடைபெறுகிறது. நாளை காலை 8 மணி அளவில் எருதுவிடும் விழா, இரவு 8மணிக்கு பாட்டு கச்சேரி தொடர்ந்து பல்லக்கு உற்சவ வாணவேடிக்கை நடைபெறும்.
தேன்கனிகோட்டை டி.எஸ்.பி. தலைமையில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






