என் மலர்
உள்ளூர் செய்திகள்

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பூக்களை படத்தில் காணலாம்.
தருமபுரி மாவட்டத்தில் 10 நாட்களுக்கும் மேலாக பூக்களின் விலை கடும் சரிவு
- பறிக்கும் கூலி கொடுக்க முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
- பன்னீர் ரோஸ் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக இருந்து வருவது விவசாயம், விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூக்கள் சாகுபடி செய்கின்றனர்.
அதிகப்படியாக குண்டுமல்லி, சாமந்தி, சம்பங்கி, செண்டு மல்லி, முல்லை, காக்கனா, கோழிக்கொண்டை, பன்னீர் ரோஸ், உள்ளிட்ட அனைத்து வகுப்புகளையும் சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது
தொடர்ந்து மாவட்டத்தில் திருமண வைபவங்கள், உள்ளூர் திருவிழாக்கள், சுப வைபவங்கள், கோவில் கும்பாபிஷேகம்,என நடைபெற்று வந்ததால் பூக்களின் விலை அதிகரித்திருந்த நிலையில் தற்பொழுது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
மாலைகளுக்கு பயன்படும் சம்பங்கி பூ கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ 160 ரூபாய்க்கு விற்பனையானது தற்பொழுது பூ மார்க்கெட்டில் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் பன்னீர் ரோஸ் கிலோ 20 ரூபாய்க்கும், அரளி கிலோ 60 ரூபாய்க்கும், குண்டு மல்லி கிலோ 200 ரூபாய்க்கும், முல்லை கிலோ 140 ரூபாய்க்கும், காக்கடா கிலோ 80 ரூபாய்க்கும், செண்டுமல்லி கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இது சம்பந்தமாக விவசாயிகள் கூறும்போது:- கடந்த இரண்டு மாதமாக பூக்கள் விலை அதிகரித்து நல்ல வருவாயை ஈட்டியது. தற்பொழுது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பூக்கள் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
வயலில் பூக்களை பறிக்கும் கூலி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம் என வேதனையோடு தெரிவித்தனர்.






