என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி, ஓசூரில் இன்றுகாலை கடும் பனிபொழிவு
- மழை நின்றதால், பனி பொழிவு தொடங்கியுள்ளது.
- அதிகாலை போலவே காலை 8 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை.
தருமபுரி,
தமிழ் மாதத்தில் கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும்.
இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் தொடர் மழை இருந்து வந்தது. தற்போது, கடந்த இரண்டு நாட்களாக மழை பொழியவில்லை. தொடர்ந்து மழை நின்றதால், பனி பொழிவு தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, அரூர், மொரப்பூர், பெத்தூர், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவுகள் ஏற்பட்டது.
அதிகாலை போலவே காலை 8 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை. இன்று காலை சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தவாறு சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.
இதே போல் ஓசூரில் இன்றுகாலை கடும் பனிபொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.






