என் மலர்
உள்ளூர் செய்திகள்

முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)
தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை 130 அடியை தாண்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
- தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- மழையால் வரதமாநதி, குதிரையாறு, பாலாறு பொருந்தலாறு ஆகிய முக்கிய அணைகள் நிரம்பி வழிகிறது.
கூடலூர்:
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழனியில் பெய்த தொடர் மழையால் வரதமாநதி, குதிரையாறு, பாலாறு பொருந்தலாறு ஆகிய முக்கிய அணைகள் நிரம்பி வழிகிறது.
மேலும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் முழுவதும் நிரம்பி உள்ளன. இதேபோல் கொடைக்கானலிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி மலைப்பகுதிகளில் புதிய அருவிகள் உருவாகி உள்ளன. இது இயற்கை எழில் கொஞ்சும் வகையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் உள்ளது.
தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் மூலவைகையாறு, கொட்டக்குடி ஆறு, முல்லைப்பெரியாறு, வராகநதி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுறண்டு ஓடுகிறது. மேலும் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.10 அடியாக உள்ளது. அணைக்கு 2530 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக உள்ளது. 2094 கன அடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 699 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 316 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.62 அடியாக உள்ளது.107 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 1, தேக்கடி 3.6, கூடலூர் 12, உத்தமபாளையம் 10.2, வீரபாண்டி 42.3, வைகை அணை 6.2, மஞ்சளாறு 28, சோத்துப்பாறை 42, ஆண்டிபட்டி 20.3, அரண்மனைபுதூர் 32.4, போடி 48.2, பெரியகுளம் 20, கொடைக்கானல் 16.5, வேடசந்தூர் மற்றும் புகையிலை ஆராய்ச்சி நிலையம் 0.6, காமாட்சிபுரம், நிலக்கோட்டை 41, நத்தம் 2.5, சத்திரப்பட்டி 12.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.