search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை-மரங்கள் சாய்ந்ததால் மின்தடை
    X

    தென்காசி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை-மரங்கள் சாய்ந்ததால் மின்தடை

    • பெரும்பாலான இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது.
    • ராமநதி அணை பகுதியில் 48.3 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. குறிப்பாக இரவு நேரத்தில் அதிக வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் சூறாவளி காற்று, இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுரண்டை, பாவூர்சத்திரம், தென்காசி, ஆவுடையானூர், திரவியம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சுரண்டை பகுதியில் சூறாவளி காற்றினால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை மின் தடை ஏற்பட்டது.

    உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் இணைப்பை வழங்கினர்.மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமநதி அணை பகுதியில் 48.3 மில்லி மீட்டர் மழையும், சிவகிரியில் 25 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. எனினும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்யாததால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை. கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் இருந்த நிலையில் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மழை பெய்ததது.

    Next Story
    ×