search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளிர்பான கடைகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்
    X

    குளிர்பான கடைகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

    • பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குதலை உறுதி செய்திட வேண்டும்.
    • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகளில் பழச்சாறு வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கப்புகளில் மட்டுமே வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    கோடை காலம் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க, பலவித குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை அருந்தும் சூழல் காணப்படுகிறது. அதனால், மாவட்டம் முழுவதும் சாலையோர மற்றும் நிரந்தர குளிர்பான கடைகளில் பரவலாக பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ள இந்த தருணத்தில் சாலையோர மற்றும் நிரந்தர வணிகம் செய்யும் வணிகர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குதலை உறுதி செய்திட வேண்டும்.

    சாலையோர உணவு வணிகர்கள் உள்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம் குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப் பொருட்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவு பொருட்களாக இருக்க வேண்டும்.

    மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் குடிநீர் தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற குடிநீராக இருத்தல் அவசியம். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான செயற்கை வண்ணங்களை சேர்த்தல் கூடாது. நுகர்வோருக்கு வழங்கும் முன்னர் அதன் காலாவதி தேதியை உறுதிப்படுத்திட வேண்டும்.

    முறையான மற்றும் தொடர்ச்சியான பூச்சி தடுப்பு முறைகளை பயன்படுத்தி, பூச்சிகள் மொய்ப்பதை தவிர்த்தல் வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகளில் பழச்சாறு வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கப்புகளில் மட்டுமே வழங்க வேண்டும்.

    குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கும் போது வணிகர்கள் தரக்குறியீடு, உணவு பாதுகாப்பு உரிமம், கொள்கலன்களில் வாய்ப்புறம் சீலிட்டு மூடியிருத்தல் மற்றும் காலாவதி நாள் போன்றவற்றை உறுதி செய்திட வேண்டும். மேலும், அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் குடிநீர் கொள்கலன்களை சூரிய ஒளிப்படும்படி வைக்கக் கூடாது.

    இத்தகைய வழிகாட்டுதல்களை கடைபிடித்து பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான மற்றும் பழச்சாறுகளை வழங்க மாவட்ட நிர்வாகம், வணிகர்களை கேட்டுக்கொள்கிறது. பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க, போதுமான அளவு உடலின் நலனை காக்க நீர் மோர் மற்றும் இளநீர் போன்றவற்றை அருந்துதல் மிகவும் நலம் பயக்கும். எனவே, பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×