search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 மாத வயது முதல் 8 மாத வயது முடியவுள்ளகிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி முகாம்கள்
    X

    4 மாத வயது முதல் 8 மாத வயது முடியவுள்ளகிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி முகாம்கள்

    • புருசெல்லோசிஸ் எனும் கன்று வீச்சு நோய் பாக்டீரியா கிருமிகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு நோயாகும்.
    • இந்நோய் மாடு, ஆடு போன்ற பிராணிகள், நாய், குதிரைகளிலும் ஏற்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புருசெல்லோசிஸ் எனும் கன்று வீச்சு நோய் பாக்டீரியா கிருமிகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் மாடு, ஆடு போன்ற பிராணிகள், நாய், குதிரைகளிலும் ஏற்படும். இறந்த நிலையில் கன்று அல்லது குட்டி பிறத்தல், நலிந்த கன்றுகள், நச்சுக்கொடி விழாமல் தங்குதல், பால்உற்பத்தி குறைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படுத்தும்.

    காளைகள் மற்றும் ஆட்டுக்கிடாக்களில் விரைவீக்கம், மூட்டு அழற்சி மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும். நாய்களிலும் கருச்சிதைவு, மூட்டு அழற்சி ஏற்படுத்தும்.நாட்டின மாடுகளில் கருச்சிதைவு ஏற்பட்டு விரைந்து தொற்றும் தன்மை கொண்டது.இந்நோய் கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கும் தொற்றும் நோயாகும். கால்நடைகளோடு நெருங்கி பழகும் விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் துறைப்பணியாளர்கள், இறைச்சி கடைகளில் பணிபுரிவோர், ஆராய்ச்சி பணியாளர்கள் மற்றும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் பால் மற்றும் இறைச்சி நுகர்வோர்களை தாக்கும் அபாயம் உள்ளது.

    இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் சுத்திகரிக்கப்படாத பால் மற்றும் இறைச்சி பொருட்களை உட்கொள்வதாலும், நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் சுரப்புகள் மற்றும் உயிர்கழிவுகளோடு தொடர்பு ஏற்படும் போது நோய் பரவிடும் வாய்ப்பு உள்ளது.

    இந்நோய் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவு. மனிதர்களில் இந்நோய் எலும்பு மற்றும் மூட்டு அழற்சி, தண்டுவட எலும்புகளில் அழற்சி, கல்லீரல் நோய், வயிறு மற்றும் குடல்களில் அழற்சி, இனப்பெருக்க உறுப்புகளில் அழற்சியை ஏற்படுத்தும். சில நேரங்களில் இந்நோய் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, கண்கள் மற்றும் இதயத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும். சில நேரங்களில் இறப்பும் ஏற்படும்.

    கால்நடைகளில் இந்நோய் தடுப்பதற்காக மருந்துகள் 1,80,000 டோஸ்கள் வரப்பெற்று சேலம் கால்நடை பராமரிப்புத்துறையில் இருப்பில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் 01.02.2023 முதல் 28.02.2023 முடிய தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது.

    இதில் 4 மாத வயது முதல் 8 மாத வயது முடியவுள்ள கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்படுகின்றது. தடுப்பூசி போடப்படும் கிடேரி கன்றுகளுக்கு அடையாள காதுவில்லைகள் பொருத்தப்படும். இந்த தடுப்பூசி ஒருமுறை போடப்பட்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புத்திறன் வெளிப்படுத்தும்.

    எனவே, கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தங்களிடம் உள்ள 4 முதல் 8 மாத வயதுள்ள கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டு தங்கள் மாடுகளை நோயிலிருந்து பாதுகாத்து கொள்வதுடன் மனிதர்களுக்கு இந்நோய் ஏற்படாமல் தடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×