search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய்க்கு இலவச மருத்துவமுகாம்
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய்க்கு இலவச மருத்துவமுகாம்

    • ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்பு தடுப்பூசி பணியானது நாளை தொடங்கி 30 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படவுள்ளது.
    • கால்நடை மருந்தகங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில் தடுப்பூசியினை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    ஆட்டுக்கொல்லி நோய் ஆடு வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோயாகும். இந்நோய் மோர்பில்லி வைரஸ் என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு அதிக காய்ச்சல், சோர்வு, தீனி உட்கொள்ளாத தன்மை, மூக்கிலிருந்து சளி வடிந்து உறைந்து இருத்தல், கண்களில் பூளை தள்ளுதல், வாயின் உட்புறங்கள் ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீர் சுரத்தல். கழிச்சல், இருமல் ஆகியவை ஏற்படும்.

    இந்நோய் பரவாமல் தடுப்பதற்கு பாதிக்கப்பட்ட ஆடுகளை உடன் அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். ஆட்டுக்கொட்டில்களையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆட்டுக்கொல்லி நோய் வராமல் தடுப்பதற்கு ஆண்டுக்கு 1முறை குறிப்பாக 4 மாத வயத்திற்கு மேற்பட்ட ஆட்டுக்குட்டி களுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி கண்டிப்பாக செலுத்த வேண்டும்.

    ஆட்டுக்கொல்லி நோய் பாதிப்பினை ஒழிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் திண்டுக்கல் உட்பட 12 மாவட்டங்களில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்பு தடுப்பூசி பணியானது நாளை தொடங்கி 30 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படவுள்ளது.

    எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடு வளர்க்கும் விவசாயிகள் 4 மாதத்திற்குமேல் வயதுடைய ஆட்டுக்குட்டிகளுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில் தடுப்பூசியினை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×