என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் மாநகராட்சி பள்ளிகளுக்கு,  படிப்படியாக வகுப்பறை வசதி செய்து தரப்படும்-  கல்விக்குழு கூட்டத்தில், மேயர் சத்யா உறுதி
    X

    கூட்டத்தில், மேயர் சத்யா பேசியபோது எடுத்த படம்

    ஓசூர் மாநகராட்சி பள்ளிகளுக்கு, படிப்படியாக வகுப்பறை வசதி செய்து தரப்படும்- கல்விக்குழு கூட்டத்தில், மேயர் சத்யா உறுதி

    • நீங்கள், மாணவர்களுக்கு நல்ல கல்வியை கற்றுத் தாருங்கள்.
    • எதிர்கால மாணவச்செல்வங்களை உருவாக்கி தாருங்கள்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சியின் கல்விக்குழு முதல் கூட்டம் நேற்று நடை பெற்றது. மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கல்விக்குழு தலைவர் எச். ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். இதில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழக அரசு, கல்வித் துறை மீது தனி கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட, கல்விக்கென அதிக நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. ஓசூர் மாநகராட்சியில் மற்ற பணிகளுடன் சேர்க்காமல், கல்விக்கென்று தனியாக டெண்டர் வைக்கப்படும்.

    இதன்மூலம், ஒவ்வொரு பள்ளிக்கும் என்னென்ன பணிகள் தேவை என்பதை கண்டறிந்து, தனி டெண்டர் மூலம் அனைத்து பள்ளிகளின் தேவைகளும் நிறைவேற்றி தரப்படும். கொரோனாவிற்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தற்போது, 9 பள்ளிகளில், ரூ.6 கோடியே 36 லட்சம் செலவில் ஸ்மார்ட் வகுப்புகள் நடை பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து.பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    மாநகராட்சிக்குட்பட்ட தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி உடனடியாக நிறைவேற்றப்படும். மேலும், படிப்படியாக வகுப்பறை வசதிகளும் செய்து தரப்படும்.

    இந்த அரசையும், ஓசூர் மாநகராட்சியையும் நம்பி ஆசிரியர்கள் தைரியமாக செயல்படலாம். அரசு பள்ளி ஆசிரியர்கள், கற்பித்தல் திறமையில்லை தேர்ந்தவர்கள் என்பதை அனைவரும் நன்கு அறிந்துள்ளனர்.

    நீங்கள், மாணவர்களுக்கு நல்ல கல்வியை கற்றுத் தாருங்கள். நல்ல சமுதாயத்தை உருவாக்கித்தா ருங்கள். எதிர்கால மாணவச்செல்வங்களை உருவாக்கி தாருங்கள். மாணவர்களுக்கு பள்ளிப்பாடங்களுடன், நமது நாட்டின் கலாச்சாரம், மொழி கலாச்சாரம் ஆகியவற்றையும் கற்றுக்கொடுங்கள்.

    பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டும், அதனை பராமரிக்கவும் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். ஓசூர் மாநகராட்சி பள்ளிகளுக்கென்று தனியாக வர்ணம் பூசப்பட வேண்டும். ஓசூர் மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளும் ஒரே வர்ணத்தில், யூனிபார்மாக காட்சி யளிப்பதை காணும்போது. குழந்தைகளை மாநகராட்சி பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்.

    இவ்வாறு கூட்டத்தில், சத்யா பேசினார்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் பால சுப்பிரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் ஆகியோர் பேசினார். மேலும், சிவராமன், யசஷ்வினி மோகன் உள்ளிட்ட கல்விக்குழு உறுப்பினர்கள், ஓசூர் மாநகராட்சிக்குட்ட 36 பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×