என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாதவரத்தில் வீட்டு உபயோக பொருள் குடோனில் பயங்கர தீ விபத்து
- குடோன் முழுவதும் தீ பற்றி எரிந்தது.
- சுமார் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கொளத்தூர்:
கொடுங்கையூரை சேர்ந்தவர் நிருபன். இவர் பெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம் பகுதிகளில் வீட்டு உபயோகப் பொருட்களான சோபா, மெத்தை, கட்டில் விற்கும் கடை வைத்துள்ளார். இவருக்கு மாதவரம் பால் பண்ணை அடுத்த பெரிய சேக்காடு, பெருமாள் கோவில் தெருவில் வீட்டு உபயோக பொருட்களை மொத்தமாக வைக்கும் குடோன் உள்ளது.
நேற்று இரவு 10 மணி அளவில் பணி முடிந்ததும் ஊழியர்கள் குடோனை பூட்டி சென்றனர். காவலாளி மட்டும் அங்கு இருந்தார்.
இந்த நிலையில் இரவு 10 மணியளவில் குடோனில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி மாதவரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு மாவட்ட அலுவலர் தென்னரசு தலைமையில் செங்குன்றம், செம்பியம், மணலி, அம்பத்தூர், வியாசர்பாடியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. சுமார் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
எனினும் குடோனில் இருந்த சோபா, மெத்தை, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. சுமார் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாதவரம் பால் பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.