என் மலர்
உள்ளூர் செய்திகள்

மானிய விலையில் விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
- விதைகள் 50 சதவீத மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பருவத்திற்கேற்ப பயிர்களுக்கு ஏற்ப காப்பீடு செய்து பயன்பெறலாம்.
ஓசூர்,
ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓசூர் வட்டாரத்தில் மழை பெய்து வருவதால் நடப்பாண்டு மானாவாரி பயிராக 6 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் ராகி விதைப்பு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்பருவத்திற்கு தேவையான ராகி ரகங்களாக கே.எம்.ஆர் 204, ஜிபியூ 66 ரகங்கள் 18 டன் விதைகளும் மற்றும் துவரை ரகங்களாக பிஆர்ஜி 1, பிஆர்ஜி 5 ரகங்கள் 7 டன் விதைகள் ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த விதைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தில் ஒரு கிலோவிற்கு 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் திட்டத்தின் கீழ் நிலக்கடலை ரகமான கதிரி 1812 ரகம் 1600 கிலோ ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிர் உரங்களாக அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் நுண்ணூட்ட சத்து உரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. அத்துடன் 100 சதவீத மானியத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க தேவையான பொருட்கள் சிறு, குறு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. துணை நீர் பாசன மேலாண்மை திட்டத்தில் டீசல் மோட்டர் அல்லது மின் மோட்டார் அமைப்பதற்கு 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம், நீர் கொண்டு செல்லும் பிவிசி குழாய்களுக்கு 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம், தரைமட்ட நீர் சேமிப்பு தொட்டி அமைக்க 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் அல்லது சதுர கன மீட்டருக்கு ரூ.350 வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பருவத்திற்கேற்ப பயிர்களுக்கு ஏற்ப காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






