என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனி மாவட்டத்தில் மீண்டும் கனமழை தொடர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி
- தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
- கூடலூர், போடி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வந்த போதிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
பெரியகுளம் சோத்துப்பாறை அணை, கல்லாறு, கும்பக்கரை உள்ளிட்ட பகுதிகளில சாரல் மழை பெய்தது. மேலும் தேவதானப்பட்டி மஞ்சளாறு, வடபுதுப்பட்டி, வடுகபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இதனால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கூடலூர், போடி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 135.95 அடியாக உள்ளது. நேற்று 643 கனஅடி நீர்வரத்து வந்த நிலையில் இன்று காலையில் 1081 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 933 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6105 மி.கனஅடியாக உள்ளது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70.05 அடியாக உள்ளது. வரத்து 832 கனஅடி, திறப்பு 769 கனஅடி, இருப்பு 5838 மி.கனஅடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து 10 கனஅடி, சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 124.80 அடி, திறப்பு 3 கனஅடி
பெரியாறு 21.4, தேக்கடி 21.6, கூடலூர், 3.8, உத்தமபாளையம் 1.6, மஞ்சளாறு 10.2, சோத்துப்பாறை 10, போடி 5.8, பெரியகுளம் 3.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.






