search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேராவூரணியில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்
    X

    பேராவூரணியில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்

    • சென்னை - ராமேஸ்வரம் விரைவு ர‌யி‌லை மீண்டும் ரயில்வே இயக்க எடுக்க வேண்டும்.
    • விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் பயன்படும் பேராவூரணி - சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும்.

    பேராவூரணி:

    விரைவு ரயில்கள் பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்லவும், ஏற்கனவே பேராவூரணி வழித்தடத்தில் தினசரி இயக்கப்பட்ட சென்னை - ராமேஸ்வரம் விரைவு ர‌யி‌லை மீண்டும் தொடர்ந்து இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, சுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுதாரர்கள் நலப்பிரிவு மாநிலச் செயலாளர் சமூக ஆர்வலர் எஸ்.ஏ.தெட்சணாமூர்த்தி, தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, பேராவூரணி தாலுகா தலைநகரமாகவும், சட்டமன்றத் தொகுதி தலைமை இடமாகவும், தேர்வுநிலை பேரூராட்சியாகவும் உள்ளது.

    இப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் விவசாயம், மீன், கருவாடு, உப்பு, தேங்காய் ஏற்றுமதி தொழில், வேலை, கல்வி, மருத்துவம், ஆன்மீகம் என பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் வெளியூர் சென்று வருகின்றனர்.

    பேராவூரணி ரயில் நிலையம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ரயில் நிலையம். சென்னை, மதுரை, ராமேஸ்வரம் செல்வதற்கும் பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி பகுதி மக்கள் ரயில் போக்குவரத்தை பெரிதும் நம்பி உள்ளனர்.

    இந்த வழித்தடத்தில் ஏற்கனவே தினசரி விரைவு ரயில் ராமேஸ்வரம் - சென்னைக்கு இயக்கப்ப ட்டது. தற்போது, சிறப்பு ரயில் மட்டுமே அவ்வப்போது இயக்கப்படுகிறது.

    எனவே, இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் பயன்படும் வகையில், பேராவூரணி வழியாக சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இரு வழிகளிலும் இயக்க வேண்டும்.

    மேலும், தற்போது இயக்கப்பட்டு வரும் செகந்திராபாத் - எர்ணாகுளம் சிறப்பு விரைவு ரயில் உள்ளிட்ட விரைவு ரயில்கள், பேராவூரணி ரயில் நிலையத்தில், ஒரு நிமிடம் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    மனுவின் நகல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ச.சு.பழனி மாணிக்கம் (தஞ்சாவூர்), சு.திருநாவுக்கரசர் (திருச்சி) கார்த்திக் சிதம்பரம் (சிவகங்கை), சட்டமன்ற உறுப்பினர்கள் என்.அசோக்குமார் (பேரா வூரணி), டி.ராமச்சந்திரன் (அறந்தாங்கி) மாங்குடி (காரைக்குடி) ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    Next Story
    ×