மகளிருக்கு ரூ.1000 என்பது தி.மு.க.வின் ஏமாற்று வேலை -முன்னாள் அமைச்சர் வளர்மதி பேச்சு

திண்டுக்கல்லில் அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலக்தில் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியபோது எடுத்த படம்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியபோது எடுத்த படம்.
Published on

திண்டுக்கல்:

மதுரையில் அடுத்த மாதம் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலக்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தனர். தற்போது தகுதியுள்ள மகளிருக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்து அதற்காக விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.

இது பெரும்பாலான மகளிருக்கு கிடைக்காது. தி.மு.க.வின் ஏமாற்று வேலைதான் இந்த உரிமைத் தொகை திட்டம். தி.மு.க.வின் பொய் பிரசாரங்களை மகளிர் அணி நிர்வாகிகள் வீடு தோறும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும்.

அடுத்த மாதம் மதுரையில் நடைபெற உள்ள கட்சியின் எழுச்சி மாநாட்டுக்கு குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி, மேற்கு மாவட்ட செயலாளர் வளர்மதி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் சி.சீனிவாசன், இரா.விசுவநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

தேன்மொழி எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், பிரேம்குமார், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், வி.டி.ராஜன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com