என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு- தலைவர்கள் இரங்கல்
- நம்முடைய அரசியல் பயணத்தில் வழிகாட்டி ஊக்குவித்த பண்பாளர்.
- தமிழ்நாட்டில் கட்சியை வழிநடத்துகின்ற தலைவராக உயர்ந்தவர்.
சென்னை:
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கையாகவும், சமூக வலைதளத்திலும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அவர்கள் கூறி இருப்பதாவது:-
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர்-ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறோம்.
தந்தை பெரியாரின் பேரன். முத்தமிழறிஞர் கலைஞர் கழகத்தலைவர் மீது மாறா பற்றுக் கொண்டவர். எதையுமே வெளிப்படையாகப் பேசும் ஆற்றலுக்கு சொந்தக்காரர். நம்முடைய அரசியல் பயணத்தில் வழிகாட்டி ஊக்குவித்த பண்பாளர்.
ஈரோடு கிழக்கு சட்ட மன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பை பெற்றோம்.
அதேபோல, ஈரோட்டில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறையின் முன்னெடுப்பில் தந்தை பெரியாரின் பூர்வீக இடத்துக்கான பட்டாவை ஈவி.கே.எஸ். இளங்கோவனிடம் வழங்கிய போது, அதற்காக தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் , நம்மையும், அவர் வாழ்த்திப் பேசியது இன்றும் நம் மனதில் நிழலாடுகிறது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்துக்கு மட்டுமன்றி, தமிழ்நாடு அரசியல் களத்திலும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தார் நண்பர்கள்-காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ: தந்தை பெரியார் அவர்களின் பேரனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு தாங்கொணா துயரத்தைத் தருகிறது.பெரியாரின் அண்ணன் ஈ.வி.கிருஷ்ணசாமி மகனும், அண்ணாவின் நெஞ்சங் கவர்ந்த தம்பியுமான ஈ.வெ.கி.சம்பத்தின் மகன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பழகுவதற்கு இனிய பண்பாளர். கொண்ட கொள்கையில் உறுதியானவர்.
காங்கிரஸ் இயக்கத்தின் சுயமரியாதை தலைவர் என்று சொல்லத்தக்க அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் கட்சியை வழிநடத்துகின்ற தலைவராக உயர்ந்தவர்.
சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர். டாக்டர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பொறுப்பினை ஏற்று தனது ஆளுமைத் திறனை வெளிப்படுத்தியவர்.
தமிழ்நாட்டில் மதசார் பர்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலிமையோடு எடுத்துச் செல்வதற்கு எவருக்கும் அஞ்சாமல் கருத்துக்களை முன்வைத்த சிறப்பு அவருக்கு உண்டு.
கடந்த மாதம் இறுதியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எப்படியும் குணமாகி மீண்டு வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அவர் மூச்சுக்காற்று இயற்கையோடு கலந்து விட்டது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தகைசால் தலைவரை இழந்த காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்: காங்கிரஸ் பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் இந்திய ஒன்றிய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த பற்றுதலை கொண்டிருந்தவர். அவ்வப்போது தொடர்பு கொண்டு என்னை ஊக்கப்படுத்தியவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச் சென்று பேசக்கூடியவர். அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.






