என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெறிச்சோடிய காய்கறி மார்க்கெட்.
விலைவாசி உயர்வால் வெறிச்சோடிய காய்கறி மார்க்கெட்
- தக்காளி விலையை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
- இதனால் மக்கள் கூட்டமின்றி ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த மார்க்கெட்டுக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு தக்காளி விலை அதிகரித்து காணப்படுகிறது. அதிக பட்சமாக ஈரோடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 130 வரை விற்பனையானது.
இதே போல் பல்ேவறு இடங்களில் மழை பெய்ததால் காய்கறி உற்பத்தியும் பாதிக்கப்பட்டு காய்கறி வரத்தும் குறைந்தது.
இதனால் தக்காளி விலையை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. மார்க்கெட்டுகளில் கீரைகள் மட்டுமே விலை குறைந்து காணப்படுகிறது.
தக்காளி மற்றும் காய்கறிகள் விலை ஏற்றம் காரணமாக நடுத்தர, ஏழை மக்கள் காய்கறி வாங்குவதை தவிர்த்து விட்டனர். இதனால் இன்று மக்கள் கூட்டமின்றி ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, வரத்து குறைந்து காணப்படுவதால் விலை வாசி அதிகரித்து காணப்படுகிறது. இன்னும் சில நாட்களில் காய்கறி வரத்து அதிகரித்து விலை குறைந்தால் தான் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும் என்றனர்.






