கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய வாலிபரை தேடும் பணி 2-வது நாளாக தீவிரம்

2 பேரும் வாய்க்காலில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினர்.
பவானிசாகர் அருகே வாய்க்காலில் மூழ்கிய வாலிபரை தேடும் பணயில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
பவானிசாகர் அருகே வாய்க்காலில் மூழ்கிய வாலிபரை தேடும் பணயில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
Published on

சத்தியமங்கலம்:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வாகராயாம் பாளையம் பப்பம்பட்டியை சேர்ந்தவர்கள் ராக்கிமுத்து (வயது 45), சிவக்குமார் (35), ராஜேந்திரன் (35).

நண்பர்களான இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் தொழிலா ளர்களாக பணியாற்றி வந்தனர்.

இவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூருக்கு வந்தனர். இதைதொடர்ந்து அங்குள்ள கீழ்பவானி வாய்க்காலில் ராக்கிமுத்து, சிவக்குமார் ஆகியோர் குளிப்பதற்காக இறங்கினர்.

அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் 2 பேரும் வாய்க்காலில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கரையில் இருந்த ராஜேந்திரன் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். ஆனால் அவர்களால் வாய்க்காலில் மூழ்கிய 2 பேரை மீட்க முடியவில்லை.

இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசிங் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடினர். இதில் அவர்கள் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ராக்கிமுத்து உடலை பிணமாக மீட்டனர்.

ஆனால் சிவக்குமார் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினர்.

இதற்கிடையே இரவு 8 மணி ஆனதால் மிகவும் இருட்டாக காணப்பட்டது. இதனால் அவரை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியை நிறுத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை எரங்காட்டூர் பகுதிக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் வந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி சிவகுமாரை 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுட்டு வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் என ஏராளமான பொதுமக்கள் 2-வது நாளாக திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான நிலை உருவானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com