என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் இன்று பூட்டிய வங்கிக்குள் அபாய சங்கு ஒலித்ததால் பரபரப்பு- போலீசார் விசாரணை
- வங்கியில் இருந்த காவலாளி வெளியில் சென்றுவிட்ட நிலையில் வங்கிக்குள் வேறு யாரேனும் நுழைந்துவிட்டார்களா என்று அச்சம் ஏற்பட்டது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இன்று காலை அபாய சங்கு ஒலிக்கத் தொடங்கியது. அந்த வழியாக நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வங்கியில் இருந்த காவலாளி வெளியில் சென்றுவிட்ட நிலையில் வங்கிக்குள் வேறு யாரேனும் நுழைந்துவிட்டார்களா என்று அச்சம் ஏற்பட்டது. இதுகுறித்து நகர் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வங்கிக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். எந்திர கோளாறு காரணமாக அபாய சங்கு ஒலித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அங்கு பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு சரிசெய்யும் பணி நடைபெற்றது. திண்டுக்கல்லில் கடந்த மாதம் வங்கிக்குள் புகுந்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று வங்கிக்குள் அபாய சங்கு நீண்டநேரம் ஒலித்துக் கொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.






