search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானி அணையின் நீர்மட்டம் உயர்வால் 4 கிராமங்களுக்கு செல்லும் பாலம் நீரில் மூழ்கியது
    X

    பவானி அணையின் நீர்மட்டம் உயர்வால் 4 கிராமங்களுக்கு செல்லும் பாலம் நீரில் மூழ்கியது

    • பரிசல் பயணம் தொடக்கம்
    • பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் பரிசல் மூலம் சென்று வருகின்றனர்.

    சிறுமுகை:

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி உள்ள கேரளம் மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.

    இதனால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கடந்த 5 நாள்களுக்கு மேலாக பவானி ஆற்றில் 10ஆயிரம் கனஅடிக்கு குறையாமல் தண்ணீர் சென்று கொண்டு உள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் பில்லூர் அணையில் இருந்து 6,500 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது.

    இருப்பினும் பவானி ஆறு வழியாகவும், நீலகிரி மாவட்டம் மாயாறு வழியாகவும் பவானிசாகர் அணைக்கு செல்லும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது.

    இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதிகளான சிறுமுகை, லிங்காபுரம், காந்தவயல் பகுதியில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது.

    இதனால், லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல், காந்தையூர், மேலூர், ஆலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை பாலம் மூழ்கியதால் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கண்ட 4 கிராம மக்கள் சென்றுவர பரிசல் பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மேற்கண்டகிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் பரிசல் மூலம் சென்று வருகின்றனர். இதனிடையே, இந்த பகுதி மக்களுக்கு விரையில் உயர்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×