search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத மோதலை ஏற்படுத்தும்விதமாக கருத்து: பா.ஜ.க. நிர்வாகிக்கு 163 நாட்கள் சிறை
    X

    மத மோதலை ஏற்படுத்தும்விதமாக கருத்து: பா.ஜ.க. நிர்வாகிக்கு 163 நாட்கள் சிறை

    • கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி கல்யாணராமன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
    • வழக்கு எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன். இவர், இரு மதங்களை சேர்ந்தவர்கள் மத்தியில் வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தைத் துாண்டும்விதமாக சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் சிட்லப்பாக்கம் போலீசார் 2017-ம் ஆண்டு மற்றும் 2018-ம் ஆண்டு வழக்குகள் பதிவு செய்தனர்.

    இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பின்னர் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கல்யாணராமன் தொடர்ந்த வழக்கில், 'பிறரின் மத உணர்வுகளை புண்படுத்தும்வகையில் கருத்துகளை பதிவிட மாட்டேன்' என்ற பிரமாணபத்திரத்தை அவர் தாக்கல் செய்தார்.

    அதை மீறி, பிற மதம் குறித்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டுவருவதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு, மாநகர கமிஷனர் அலுவலகத்தில் கல்யாணராமனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

    அந்த புகாரின்படி, கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி கல்யாணராமன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிரிஜாராணி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிக்கிறேன். அவர் ஏற்கனவே 2021-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி வரை சிறையில் இருந்துள்ளார். இந்த நாட்களை தண்டனைக் காலத்தில் கழித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளார். தண்டனைக் காலத்தைவிட ஏற்கனவே சிறையில் இருந்த நாட்கள் அதிகம் என்பதால், இந்த தீர்ப்பால் கல்யாணராமன் மீண்டும் சிறைக்குச் செல்லத் தேவையில்லை என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×