என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து-டிரைவர் காயம்
- விபத்தில் ஆட்டோ டிரைவர் தீனாவுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.
- கோவில் முன்பு உள்ள பள்ளத்தில் கண் இமைக்கும் நேரத்தில் கவிழ்ந்தது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று காலை ராட்சத இரும்பு உருளை ஏற்றி சென்ற லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். அதன் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த இரு விபத்துகளால் பெங்களூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
அப்போது காவல்துறையினரும் சாலை பராமரிப்பு குழுவினரும் போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நார்த்தம்பட்டி பகுதியை சேர்ந்த தீனா (வயது24) என்பவர் தன்னுடைய ஆட்டோவில் வெள்ளக்கல் பகுதியில் இருந்து சாலையின் எதிர் திசையில் தொப்பூரை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது தொப்பூர் ஆஞ்சநேயர் கோவில் முன்பு வந்த போது சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வலது புறமாக திடீரென ஆட்டோவை திருப்பிய பொழுது கோவில் முன்பு உள்ள பள்ளத்தில் கண் இமைக்கும் நேரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் தீனாவுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






