என் மலர்
உள்ளூர் செய்திகள்

தட்டிக்கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
- ஆத்திரமடைந்த மஞ்சு, மதுகுமாரை கல்லால் தாக்கினார்.
- மஞ்சுவும், அவரது நண்பர்களும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் (51) என்பவரை தாக்கினர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அடவிசாமிபுரம் கிராமத்தில் கல் குவாரிகள் உள்ளன. இந்த கல் குவாரிகளுக்கு தினமும் ஜல்லி கற்கள் மற்றும் எம்.சாண்ட் மணல் ஆகியவற்றை ஏற்றி செல்ல டிப்பர் லாரிகள் சென்று வருகின்றன.
இதற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அடவிசாமிபுரம் பகுதியில் சென்ற டிப்பர் லாரிகளை அதே பகுதியை சேர்ந்த மஞ்சு மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து டிரைவர்களிடம் தகராறு செய்தனர்.
இதை அப்பகுதி மக்கள் கண்டித்துள்ளனர். அப்போதும் மஞ்சுவுக்கும், அதேபகுதியை சேர்ந்த மதுகுமார் (வயது24) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மஞ்சு, மதுகுமாரை கல்லால் தாக்கினார்.
அதனை தடுக்க சென்ற அவரது தந்தை முனிராஜ் (50) என்பவரையும் மஞ்சு தாக்கினார். இதில் தந்தை-மகன் 2 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மஞ்சுவும், அவரது நண்பர்களும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் (51) என்பவரை தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார். இதையடுத்து பொதுமக்கள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






