search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செந்துறை வந்த அனுமன் சிலை
    X

    10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செந்துறை வந்த அனுமன் சிலை

    • அனுமன் சிலை 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செந்துறை வந்தது
    • பக்தர்கள் உற்சாகமாக வரவேற்று வழிபாடு செய்தனர்

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வெள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ந்தேதி பல கோடி மதிப்புள்ள வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அனுமன் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது. இது குறித்து அப்போது கோவில் தர்மகர்த்தா பாலகிருஷ்ணன் செந்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

    இந்த வழக்கை தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ராஜாராமன் இணையதளம் மூலம் இந்த சிலை ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்டதை கண்டுபிடித்தார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அப்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அனுமன் சிலையை ஆஸ்திரேலியா பிரதமர் ஒப்படைத்தார்.

    10 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டு பிடிக்கப்பட்ட இந்த சிலையை உடனடியாக மீட்டு தங்களது கிராமத்திற்கு கொண்டு வந்து கோவிலில் வைத்து வழிபாடு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகளையும் கண்டுபிடித்து மீட்டுத்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் வெள்ளூர் கிராமத்திற்கு வந்த சிலைத்தடுப்பு பிரிவு போலீசார் கோவிலை ஆய்வு செய்து விட்டு சிலையை கும்பகோணம் சிலைத் திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிலையை கோவிலில் வைத்து வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

    அதனைத் தொடர்ந்து நேற்று ஆஞ்சநேயர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. சைலேஷ் குமார் யாதவ் கிராம மக்களிடம் ஒப்படைத்தார்.பின்னர் கிராம மக்கள் சிலையை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து புனித நீரால் அபிஷேகம் செய்து கோவிலுக்குள் கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சைஷேஸ்குமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 2012 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட ஆஞ்சிநேயர் சிலை இன்று சொந்த ஊரில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டது.

    இந்த சிலை 16 ஆம் நூற்றாண்டான விஜய பேரரசு காலத்தை சேர்ந்தது. இச்சிலை ஐம்பொன் சிலை ஆகும். இது 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு (41 லட்சம் ரூபாய்) விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இன்று அச்சிலை பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சிலை தொடர்ந்து கோவிலில் வழிபாட்டிற்கு வைக்கப்படும். இதனுடன் கடத்தப்பட்ட மற்ற 3 சிலைகள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்க்கு கடத்தப்பட்ட 23 சிலைகள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 64 சிலைகள் மீட்க முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சிங்கப்பூரில் உள்ள 15 சிலைகளை மீட்க இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார ஒப்பந்த சட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமெரிக்கா, லண்டன் ஆகிய நாடுகளில் உள்ள சிலைகள் உள்ளது கண்டறிப்பட்டுள்ளது. அதனையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். அப்போது அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, சிலை கடத்தல் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் உள்ளிட்ட ஏராளமான போலீசார் இருந்தனர்.

    Next Story
    ×