என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடுகளில் மானியத்துடன் மூலிகை தோட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
- வீடுகளில் மானியத்துடன் மூலிகை தோட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
- நபர் ஒருவருக்கு ரூ.750 பயனாளியின் பங்கு தொகையாக வசூலிக்கப்படும்.
அரியலூர்:
வீடுகளில் மானியத்துடன் மூலிகை தோட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அரியலுார் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தில் அரியலூர் மாவட்டத்திற்கு 300 வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க ரூ.2.25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மாவட்டத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மூலிகை தோட்டம் அமைக்க ரூ.1,500 மதிப்பில் துளசி, கற்பூரவள்ளி, திருநீற்றுப்பச்சிலை, ஆடாதொடை, வல்லாரை, திப்பிலி, அஸ்வகந்தா, பிரண்டை, கற்றாழை, கீழாநெல்லி போன்ற 10 வகையான மூலிகை செடிகள் அடங்கிய பைகள், 20 கிலோ தென்னை நார் கட்டிகள், 4 கிலோ மண்புழு உரம் அடங்கிய தொகுப்பு, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. நபர் ஒருவருக்கு ரூ.750 பயனாளியின் பங்கு தொகையாக வசூலிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளோர் உரிய ஆவணங்களுடன் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இத்திட்டம் தொடர்பான மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






