search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பத்தூர் பால் பண்ணையில் எந்திர கோளாறு- ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி
    X

    அம்பத்தூர் பால் பண்ணையில் எந்திர கோளாறு- ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி

    • ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக பொது மக்கள் கடைகளில் திருப்பி கேட்டு தகராறு செய்தனர்.
    • எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பால் பவுடர் சரியாக கலக்கப்படவில்லை. இதனால் பாக்கெட்டில் பவுடராக காணப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு பிரிவினர் போராட்டம் நடத்துவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் சொன்னாலும் சென்னை உள்பட பல இடங்களில் ஆவின் பால் கொள்முதல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் பற்றாக் குறை, பால் கொள்முதல் குறைவு காரணமாக பால் வினியோகம் சென்னையில் தாமதமாகி வருகிறது. மாதவரம், அம்பத்தூர் பால் பண்ணையில் நீடித்து வரும் பிரச்சினையை சமாளிக்க அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

    பால் தட்டுப்பாட்டை சமாளிக்க மகாராஷ்டிராவில் இருந்து பால் பவுடர், வெண்ணை கொள்முதல் செய்யப்பட்டு அதனை சமன்படுத்திய பால் (பச்சை பாக்கெட் பால்) தரத்திற்கு மாற்றி வினியோகம் செய்வதாக கூறப்படுகிறது.

    பால் கொள்முதல் குறைந்துள்ள நிலையில் அதனை ஈடு செய்ய ஆவின் நிர்வாகம் எடுத்த நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டது.

    சென்னையில் அம்பத்தூர் பண்ணையில் இருந்து நேற்று காலையில் வினியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக புகார் எழுந்தது.

    பால் பவுடர் மற்றும் வெண்ணை சரியாக சமன் படுத்தப்படாததால் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்ட 60 ஆயிரம் பாக்கெட்டுகள் கெட்டுப்போனதாக முகவர்கள் தெரிவித்தனர்.

    எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பால் பவுடர் சரியாக கலக்கப்படவில்லை. இதனால் பாக்கெட்டில் பவுடராக காணப்பட்டது. இதை வாங்கி சென்ற பொது மக்கள் வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு கடைகளில் திருப்பி கொடுத்தனர்.

    அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், முகப்பேர், அண்ணாநகர், போரூர், பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வினியோகிக்கப் பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக பொது மக்கள் கடைகளில் திருப்பி கேட்டு தகராறு செய்தனர்.

    இந்நிலையில் சென்னையில் ஒரு சில பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பால் வினியோகம் இன்று பாதிக்கப்பட்டது. அதி காலை 5 மணி வரை அம்பத்தூர் பண்ணையில் இருந்து பால் வினியோக வாகனங்கள் வெளியே செல்ல வில்லை. பால் அட்டைதாரர் களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சப்ளை செய்யப் பட்டது. ஆனால் கடை களுக்கு வழங்கப்படும் பால் பாக்கெட்டுகள் காலை 6 மணி வரை வெளியே செல்லவில்லை. இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். கடைகளுக்கு 7, 8 மணிக்கு மேல் தான் பால் சப்ளை செய்யப்பட்டது. ஆவின் பால் கிடைக்காததால் தனியால் பாலை வாங்கி சென்றனர்.

    சென்னையில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் வினியோகம் தாமதத்தால் தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    இது குறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சமன்படுத்தப்பட்ட பாலில் கொழுப்புசத்திற்கு இணையாக ஒரு சதவீதம் பால் பவுடர் கலக்கப்படும். அவ்வாறு கலக்கும் எந்திரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப பிரச்சினை காரணமாக முறையாக கலக்கப்படவில்லை. இதனால் பால் கெட்டுப் போகாது. பால் கெட்டுப் போனதாக பொதுமக்கள் கூறியதால் அவர்களுக்கு மாற்று பாக்கெட் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. கடைகளுக்கு சப்ளை செய்த பாலில் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டது.

    அதனை சரி செய்து பால் பதப்படுத்தி வினியோகம் செய்யும் பணி சீராக்கப்பட்டுள்ளது. எந்தி ரத்தை சரி செய்யும் பணி இரவு வரை நீடித்தது. அதனால் இன்று காலையில் பால் வினியோகம் செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. நாளை முதல் பால் வினியோகம் சீராகி விடும். தொழிலாளர்கள் பற்றாக்குறை எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அம்பத்தூர் பால் பண்ணையில் தினமும் 5 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×