search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ேகாவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
    X

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ேகாவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

    • மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • கோவை மாவட்ட காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கோவை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் அதிகளவு கூடுவதால், கோவை மாவட்ட காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில், பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கோவையில் அதிகளவு கூடும் இடங்களான ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி, ஆர்.எஸ்.புரம், ராஜவீதி, பெரிய கடைவீதி, புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் பாதுகாப்புக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள், போக்குவரத்தை நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    கோவையில் மாநகரில் 1500 போலீசார் புறநகரில் 500 போலீசார் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மக்கள் கூடும் இடங்களில் தற்காலிககண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் சுழற்சி முறையில் பணியமர்ப்பத்தப்பட்டு, நேரடியாகவும், பைனாகுலர் மூலமும் கண்காணித்து, குற்ற செயல்கள் நடக்காமல் தடுத்து வருகின்றனர்.

    இதுதவிர கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், நகை பறிப்பு ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் சாதாரண உடை அணிந்து கண்காணித்து வருகின்றனர். இதுதவிர கோவை மாநகரில் ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் கிராஸ்கட்ரோடு ஆகிய பகுதிகளில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து போலீசார் சி.சி.டி.வி.காமிரா பதிவுகளை கண்காணித்தும், குற்ற வாளிகள் நடமாட்டத்தை கண்காணித்தும், கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்கள், சிறுமிகளை உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

    மேலும், போலீசார் ஒலி பெருக்கிகள் மூலம் திருட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகளையும், செல்போன், பணம், தங்க நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, ராஜவீதி பகுதியில், வாகனங்கள் செல்ல இயலாத இடங்களிலும், கூட்ட நெரிசலான இடங்களிலும் டிரோன் கேமிராக்கள் மூலம் கண்காணித்து குற்ற நிகழ்வுகள் நடக்காதவாறு கண்காணித்து வருகின்றனர்.ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, ராஜவீதி பகுதிகளில் கூடுதலாக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப் பட்டு, தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணித்து வருகின்றனர்.

    இதுதவிர போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு போலீசார், நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, ராஜவீதி கிராஸ்கட் ரோடு பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகள் திருடப்படாமல் தடுக்க கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக கட்டிக் கொள்ள வலியுறுத்தப்பட்டு, துணி கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக, கோவையில் அனைத்து பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணிவரை யிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×