என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- நூறு நாள் வேலை திட்டத்திற்கு சுழற்சி முறையைக் கைவிட்டு கூடுதலாக நிதி ஒதுக்கி எந்தவித குளறுபடியும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.
- விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்சன் வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செல்வராசு, மாநிலக்குழு உறுப்பினர் லெனின், மாவட்ட துணைத் தலைவர் வேலு, மாவட்ட துணை செயலாளர் நாராயணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் வரதராஜி, வெங்கடாசலம், கல்பனா முருகன், ராஜா, மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி விளக்கவுரை ஆற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் விவசாயம், விவசாயம் சார்ந்த வேலைகளில் ஒரே மாதிரியான சட்டக்கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்தி, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்திற்கு சுழற்சி முறையைக் கைவிட்டு கூடுதலாக நிதி ஒதுக்கி எந்தவித குளறுபடியும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.
நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாள் ஆகவும், சட்டக்கூலியாக, 600 ரூபாய் வழங்க வேண்டும். 60 வயது முடிவடைந்த அனைத்து விவசாய, விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்சன் வழங்க வேண்டும். வீட்டுமனையற்ற மக்களுக்கு வீட்டுமனை இடமும், வீடு கட்ட 10 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அரசு புறம்போக்கு இடங்களில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு உடனடியாக மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.






