search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் நெல்லையில் இருந்து திருச்செந்தூர், செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கம்

    • நெல்லை-செங்கோட்டை, திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லா ரெயில்கள் இன்று முதல் இயக்கப்பட்டது.
    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    கொரானா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரெயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இன்று முதல் நெல்லை திருச்செந்தூர், நெல்லை- செங்கோட்டை இடையே கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    நெல்லை- திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நெல்லை வருகிறது.

    இதற்கிடையே மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12. 05 மணிக்கு ஒரு ரயில் புறப்பட்டு நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு சென்றது. அந்த ரயில் மீண்டும் மதியம் 2 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு 4.05 மணிக்கு மணியாச்சிக்கு சென்றது.

    இந்த ரெயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    நெல்லை- செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு காலை 11.25 மணிக்கு செங்கோட்டை சென்றது.

    இதே மார்க்கத்தில் மற்றொரு நெல்லை-செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு செங்கோட்டை செல்கிறது.

    மறுமார்க்கத்தில் செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு நெல்லை வந்தது.

    இதே மார்க்கத்தில் மற்றொரு செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு நெல்லை செல்லும்.

    இந்த ரெயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில் மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.20 மணிக்கு செங்கோட்டை வந்தடைந்தது. மறுமார்க்கத்தில் செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் காலை 11.50 மணிக்கு புறப்பட்டு மாலை 3.35 மணிக்கு மதுரை சென்றது.

    இந்த ரெயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இன்று முதல் இயக்கப்பட்டதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×