என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் வெள்ளியங்காடு நால்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய போது எடுத்த படம்
வெள்ளியங்காடு நால் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம் - கடைக்காரர்கள் எதிர்ப்பால் பரபரப்பு
- பிற பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை என்று சிலர் குற்றம் சாட்டினர்.
- நோட்டீஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து பிரதான ரோடுகள் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. நேற்று வெள்ளியங்காடு நால் ரோடு பகுதியில் கல்லாங்காடு செல்லும் ரோட்டில், இருபுறமும் கடைகள் முன் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதற்காக, நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் பொக்லைன் வாகனத்துடன் அங்கு சென்றனர்.
கடைகள் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தெரிவித்தனர். இதனால், கடை உரிமையாளர்கள், பந்தல், ெஷட், போர்டுகள், பொருட்கள் ஆகியவற்றை அவர்களாகவே அகற்றிக் கொண்டனர்.
இந்நிலையில், நால்ரோடு பகுதியில் ஒரு ரோட்டில் மட்டும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதாகவும், பிற ரோடுகளில் அது குறித்து கண்டு கொள்ளாமல் பாரபட்சம் காட்டுவதாகவும் கூறி, கட்டட உரிமையாளர்கள், கடைக்காரர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
இதனால், பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து எந்த நோட்டீசும் வழங்கவில்லை. பிற பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை என்று சிலர் குற்றம் சாட்டினர்.
அதிகாரிகள் தரப்பில், ஆக்கிரமிப்பு அகற்றுமாறு இரு முறை ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் உத்தரவு பெற்று, நோட்டீஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






