உளுந்தூர்பேட்டை அருகே ஒரு வழிப்பாதையில் சென்ற அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து: 12 பேர் படுகாயம்

லாரி மீது அரசு பஸ் மோதி இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான அரசு பஸ் மற்றும் லாரியை படத்தில் காணலாம்.
விபத்துக்குள்ளான அரசு பஸ் மற்றும் லாரியை படத்தில் காணலாம்.
Published on

கள்ளக்குறிச்சி:

பெங்களூரில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு திட்டக்குடிக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை திட்டக்குடியைச் சேர்ந்த டிரைவர் தங்கராஜ் (வயது 47) ஓட்டி வந்தார். இந்த பஸ் உளுந்தூர்பேட்டைக்கு வராமல் எலவனாசூர்கோட்டை ஆசனூர் வழியாக சென்றது. அப்போது ஆசனூர் சிப்காட் அருகே ஒரு வழிப்பாதையில் சென்றது. அப்போது எதிரில் வந்த லாரி மீது அரசு பஸ் மோதி இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதில் அரசு பஸ்சின் கண்டக்டர் தேவேந்திரன் (54), திட்டக்குடியைச் சேர்ந்த பயணிகள் இந்திராகாந்தி (58), நீலாவதி (50), மோகன் (55), பெரம்பலூர் ராஜேந்திரன் (55), பெங்களூரு சந்துரு (25), லாரி கிளினர் அஜித் (25) ஆகியோர் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எடக்கல் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும் என்பதால் ஒரு வழிப்பாதையில் அரசு பஸ் சென்றதால் இந்த விபத்து நடந்தது. இது குறித்து எடக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com