search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டுவாழ்மடம் மக்களின் வசதிக்காக ரெயில்வே தண்டவாளம் பகுதியில் தற்காலிக சாலை
    X

    ஊட்டுவாழ்மடம் மக்களின் வசதிக்காக ரெயில்வே தண்டவாளம் பகுதியில் தற்காலிக சாலை

    • சுரங்கம் பணி விரைவில் தொடங்குகிறது
    • ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட், 4 மாத காலம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் ரெயில்வே கேட் உள்ளது. வடிவீஸ்வரத்தில் இருந்து ஊட்டுவாழ்மடம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு செல்லும் வகையில் இந்த வழித்தடம் உள்ளது.

    ரெயில் நிலையத்தின் அருகே இந்த கேட் இருப்பதால், ரெயில்கள் வருகை, என்ஜின் சோதனை ஓட்டம் போன்றவற்றுக்காக அடிக்கடி மூடி திறக்கப்படுகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகனங்கள் கேட் முன்பு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. தினமும் 15 முறைக்கு மேல் கேட் மூடப்படுவதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டு வந்தனர்.

    இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கான டெண்டர் விடப்பட்டு, கடந்த 15-ந்தேதி முதல் பணிகள் தொடங்க இருப்ப தாக அறிவிக்கப்பட் டது. இந்த பணி காரணமாக ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட், 4 மாத காலம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே கேட் பகுதியில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

    இதனை பார்த்த ஊட்டு வாழ்மடம் உள்ளிட்ட பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுரங்க பாதைக்காக 4 மாதம் கேட் மூடப்பட்டால், தாங்கள் நாகர் நகருக்கு வருவது சிக்கலாகும். சுமார் ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடிவீஸ்வரம் வர, சுசீந்திரம் சோழன்திட்டை அணை வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்ற வேண்டி வரும்.

    எனவே தற்போதுள்ள ரெயில்வே கேட் அருகே காலியாக இருக்கும் இடத்தில் தற்காலிக சாலை அமைத்து விட்டு அதன்பிறகு சுரங்கப்பாதை பணியை தொடங்க வேண்டும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளிடம் மனுவும் கொடுத்தனர். இதனை தொடர்ந்து ஊட்டுவாழ்மடம் கேட் மூடும் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் தற்காலிக சாலை தொடர்பாக ஆலோசனை நடத்தியது. ஊட்டுவாழ்மடம் கேட் அருகே உள்ள தனியார் இடத்தை சீரமைத்து தற்காலிக சாலை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்காலிக சாலை அமைப்பதற்காக, தனியார் இடங்களை சீரமைக்கும் பணி இன்று காலை தொடங்கியது. அங்குள்ள மேடு, பள்ளங்கள் மண் கொட்டி நிரப்பப்பட்டது. சாலை அமைக்கப்பட்டதும், அங்கு தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் அனைத்தும் முடிந்ததும், ஊட்டுவாழ்மடம் கேட் மூடப்பட்டு, சுரங்கப்பாதை பணி தொடங்கப்படும் என ரெயில்வே வட்டாரங்களில் கூறப்படுகிறது.

    Next Story
    ×