என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த காட்சி.
சேரன்மகாதேவி அருகே தேங்காய் தும்புகள் ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீ
- சிங்கிகுளத்தில் இருந்து தேங்காய் தும்புகளை ஏற்றுக்கொண்டு ஒரு லாரி சென்றது.
- மின் வயரில் லாரியில் இருந்த தும்புகள் உரசியதில் திடீரென தீப்பிடித்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் என்ற பகுதியில் இருந்து சேரன்மகாதேவி வழியாக ஆலங்குளம் பகுதியில் உள்ள தனியார் ஆலைக்கு தேங்காய் தும்புகளை ஏற்றுக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.
திடீர்தீ
லாரியை ஆலங்குளத்தை சேர்ந்த முருகானந்தம் (வயது 35) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். லாரி சுமார் இரவு 8.30 மணியளவில் சேரன்மகாதேவி அடுத்த மேலச்சேவல் வாணியங்குளம் என்ற பகுதியில் வந்த போது லாரியின் அதிக பாரம் ஏற்றி சென்றதால் மேலே சென்ற மின் வயரில் லாரியில் இருந்த தும்புகள் உரசியதில் திடீரென தீப்பிடித்தது.
தொடர்ந்து தீ மளமளவென பிடித்து லாரியிலும் தீப்பிடிக்க தொடங்கியது. இதனால் லாரியை விட்டுவிட்டு டிரைவர் ஓடிவிட்டார்.
தொடர்ந்து தகவல் அறிந்த சேரன்மாதேவி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதற்குள் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. திடீரென லாரி தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






