தூத்துக்குடியில் கடலில் தத்தளித்த அரிய வகை மிளா- மீனவர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்

மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது அது மிளா வகை மான் என்று தெரிய வந்தது. வனத்துறையினர் மிளா மானை மீட்டு விளாத்திகுளம் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர்.
மீட்கப்பட்ட மிளாவை படத்தில் காணலாம்.
மீட்கப்பட்ட மிளாவை படத்தில் காணலாம்.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை நண்டு வலை வைப்பதற்காக சென்றனர். அதனை தொடர்ந்து இன்று காலையில் அந்த நண்டை எடுப்பதற்காக அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் சென்றனர்.

கடல் தொழில் முடிந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏதோ தத்தளித்துக் கொண்டி ருந்ததை பார்த்த சக மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது மிளா வகை மான் என்று தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து கரை பகுதிக்கு வந்து மேலும் 2 பேரை அழைத்து சென்று அந்த மானை பத்திரமாக பைபர் படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அங்கே அது தப்பி ஓட நினைத்ததால் அதை கால் பகுதியை கட்டி வைத்திருந்தனர்.

பின்பு வனத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மானை மீட்டு விளாத்திகுளம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த அரியவகை மானை அப்பகுதி மீனவர்கள் வந்து பார்த்து ரசித்து செல்போனில் படம் பிடித்து சென்றனர்.

இதுகுறித்து மீனவர் ஜேரோன் (பைபர் போட் உரிமையாளர்) கூறுகையில், நாங்கள் அதிகாலை 5 மணிக்கு கடலில் நண்டு வலையை எடுத்து நண்டுபிடித்து வரும்போது கரையில் இருந்து 1 கிலோமீட்டர் தூரம் இருக்கும் பகுதியில், கடலில் பறவைகள் கூட்டமாக மானை தூரத்தி கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். உடனே நாங்கள் 4 பேர் சேர்ந்து அதனை மீட்க முயன்றோம். ஆனால் அதன் எடை அதிகமாக இருந்ததால் எங்களால் அதனை மீட்க முடியவில்லை. பின்னர் கரைக்கு வந்து கூடுதலாக 2 பேரை அழைத்து சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மிளாவின் கொம்பில் கயிற்றை கட்டி கரைக்கு இழுத்து வந்து வனசரகத்திற்கு தகவல் கொடுத்தோம். பின்பு அவர்கள் வந்து ஆட்டோவில் ஏற்றி வனப்பகுதியில் விட்டனர் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com