என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிய கரடி.
    X

    ஊட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிய கரடி.

    • வகுப்பறையில் உள்ள 2 பீரோக்கள், மாணவா்கள் அமரும் இருக்கைகளை உடைத்தும், புத்தகங்களை கிழித்தும் வகுப்பறையை சூறையாடியது.
    • கரடியை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் உலவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஊட்டி அருகே உள்ள உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட கடசோலை பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். நேற்று காலை மாணவர்கள், ஆசிரியர்கள் வழக்கம்போல பள்ளிக்கு வந்தனர்.அப்போது பள்ளியின் வகுப்பறை மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்திருந்தது. இதையடுத்து, அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அதிகாலை நேரத்தில் கரடி ஒன்று பள்ளிக்குள் புகுந்து வகுப்பறையில் உள்ள 2 பீரோக்கள், மாணவா்கள் அமரும் இருக்கைகளை உடைத்தும், புத்தகங்களை கிழித்தும் வகுப்பறையை சூறையாடியது. உணவு ஏதும் கிடைக்காததால் கரடி மீண்டும் அருகே உள்ள தேயிலை தோட்டத்துக்கு சென்று மறைந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில், கரடி நடமாட்டம் இந்த பகுதியில் அதிகரித்துள்ளது. இந்த கரடியை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×