

சங்ககிரி:
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேவண்ணக் கவுண்டனூர் ஊராட்சி, மஞ்சக்கல்பட்டி கிராமம், அம்பாள் நகரை சேர்ந்தவர் சாந்தி (வயது 56). இவர், எடப்பாடி அருகே வட்ராம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு, இவரது கணவர் குமரவேல் (63), மகள் சண்முகப்பிரியா (33), பேரன் லவன்அர்ஷத் (11) ஆகியோருடன் வீட்டில் உறங்கினார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், வீட்டின் பின் வாசல் கதவை உடைத்து உள்ளே நுழைந்தான். பூஜை அறையில் உண்டியலில் இருந்த ரூ.2000, தூங்கிக் கொண்டிருந்த சாந்தியின் கழுத்தில் இருந்த 12 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றார்.
அப்போது விழித்துக் கொண்ட சாந்தி கூச்சலிட்டார். வீட்டில் இருந்தவர்கள் வருவதற்குள், தாலியை பறித்துக் கொண்டு கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இச்சம்பவம் குறித்து சாந்தி சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி, எடப்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா, எஸ்.ஐ சுதாகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.