என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.73 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரயு வழங்கினார். 

    8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.73 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

    • சாலை வசதி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 277 மனுக்களை வழங்கினார்கள்.
    • 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.73 ஆயிரத்து 500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.73 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எம்.சரயு வழங்கினார்.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 277 மனுக்களை வழங்கினார்கள்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து ஊத்தங்கரை ஒன்றியம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த சத்யா என்பவர் தனது 3 குழந்தைகளும் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்தவ உதவி வேண்டி மனு கொடுத்தார். அந்த மனுவின் மீது உடனடியாக தீர்வு காணும் பொருட்டு, அந்த குழந்தைகளின் எலும்பு மஜ்ஜை சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் மதிப்பிலான முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை வழங்கினார்.

    தொடரந்து குழந்தைகள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அரசு பஸ்களில் செல்லும் போது அவர்களுக்கு இலவச பஸ் பயண வசதி வழங்க வேண்டும் என்று போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.73 ஆயிரத்து 500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலர் சையத் அலி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×