search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்
    X

    போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்

    • 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.7,000 முதல் 8,000 வரை விற்பனையானது.
    • கடந்த வாரம் ஒரு ஆடு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வாரச்சந்தையில் தங்கம் முதல் தக்காளி வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் இந்த சந்தையில் ஒரு திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கிறது.

    இந்த சந்தை தமிழகத்தில் மிகப்பெரிய சந்தை ஆகும். இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு அதிகாலை முதலே ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.

    இதை சேலம், ஈரோடு, திருபத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.

    இதனிடையே நாளை மறுநாள் (புதன்கிழமை) யுகாதி பண்டிகையை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் கொண்டாடுவது வழக்கம்.

    அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் யுகாதி பண்டிகை கொண்டாடி வருகிறார்கள். யுகாதி பண்டிகை முன்னிட்டு கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கறி விருந்துக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கறி விருந்து வைப்பது வழக்கம்.

    இதனால் நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சந்தையில் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.7,000 முதல் 8,000 வரை விற்பனையானது. கடந்த வாரம் ஒரு ஆடு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

    யுகாதி பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் ஒரு ஆட்டின் மீது ஆயிரம் ரூபாய் விலை அதிகரித்தது. இதனால் நேற்று மட்டும் ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×