search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்மொழி பூங்காவில் நடந்துவரும் மலர் கண்காட்சியை இதுவரை 30 ஆயிரம் பொதுமக்கள் பார்வையிட்டனர்
    X

    செம்மொழி பூங்காவில் நடந்துவரும் மலர் கண்காட்சியை இதுவரை 30 ஆயிரம் பொதுமக்கள் பார்வையிட்டனர்

    • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.
    • பாட்டி வடை சுடுவது போல் அமைக்கப்பட்டுள்ள மலர் சிற்பம் மிகவும் அருமையாக உள்ளது.

    சென்னை:

    கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னையில் 2-வது முறையாக மலர் கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் 3-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் கண்காட்சி நிறைவு பெறுகிறது.

    நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களில் கோடை விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இதுபோல் சென்னையில் நடந்து வரும் இந்த கண்காட்சியை சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு ரசித்தனர்.

    கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை மலர்கள் எடுத்து வரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டரை லட்சம் கொய் மலர்கள், 250 கிலோ உதிரி பூக்களால் தேர், யானை மற்றும் பல்வேறு வடிவங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். 5 முதல் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.20-ம், பெரியவர்களுக்கு ரூ.50-ம் வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை கண்காட்சியை பார்வையிடலாம்.

    கண்காட்சியில் தத்ரூபமாக கைத்தறி நெசவு செய்வது போன்றும், குயவர், வடை சுடுவது, அப்பளம் சுடுவது, வண்ணத்து பூச்சி வடிவங்கள், மயில், திண்பண்ட கடைகள், மலர்களிலே உருவான மாட்டு வண்டி, நகை பட்டறை, பிரமாண்ட அலங்கார வளைவு ஆகியவை முற்றிலும் காய்கறி, பழங்கள், மலர்களால் உருவாக்கப்பட்டது பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

    நிறைவு நாளான இன்று காலையிலேயே பொதுமக்கள் திரண்டு வந்து கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். கடைசிநாள் என்பதால் குழந்தைகளுடன் சாரை சாரையாக அணிவகுத்து வந்தனர். மலர் கண்காட்சியை இதுவரை 30 ஆயிரம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.

    கண்காட்சியை பார்வையிட பள்ளிக்கரணையில் இருந்து குடும்பத்துடன் வந்த ரம்யா கூறியதாவது:-

    மலர் கண்காட்சியை பார்வையிட கடைசி நாள் கூட்டம் அலைமோதும் என்பதால் காலையிலேயே வந்து விட்டோம். எனது குழந்தைகள் மிகவும் ரசித்து வருகின்றனர். ஒவ்வொன்றும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், மலர் கண்காட்சி போல் உள்ளது.

    கிருத்திகா (மடிப்பாக்கம்):-

    இந்த கண்காட்சியை பார்வையிட எங்களது குழந்தைகள் தான் அதிகமாக ஆர்வம் காட்டினார்கள். காலையிலேயே இங்கு வந்து விட்டோம். மலர்களால் உருவாக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளும், மயில் உருவமும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    பாட்டி வடை சுடுவது போல் அமைக்கப்பட்டுள்ள மலர் சிற்பம் மிகவும் அருமையாக உள்ளது. கண்காட்சியை மேலும் நீட்டித்தால் ஏராளமான பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×