மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.50 லட்சத்தை அபேஸ் செய்த 3 பேர் கைது

ரகசிய எண்ணை கேட்டு அதன்மூலம் 5 தவணைகளாக ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் பணத்தை கும்பல் அபேஸ் செய்தனர். புகாரின் பேரில் தேனி சைபர் கிரைம் போலீசார் டெல்லியில் இருந்த 3 பேரை கைது செய்து பணத்தை மீட்டனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி மாவட்டம் போடி மெட்டு பகுதியை சேர்ந்த கந்தசாமி மனைவி ரஞ்சிதம் (வயது78). இவர் தனது மகள் ஸ்ரீதேவி மற்றும் பேரன் பேத்தியுடன் வசித்து வருகிறார்.

கடந்த ஜூலை மாதம் 6ந் தேதி ரஞ்சிதத்தின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் உங்களது கணவர் எல்.ஐ.சி.யில் இன்சூரன்ஸ் போட்டுள்ளார்.

அது முதிர்வு அடைந்து விட்டதால் அந்த தொகை ரூ.37,041, உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கிறோம் என்று கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்டு அதன்மூலம் 5 தவணைகளாக ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்துள்ளனர். இதனை அறிந்த ரஞ்சிதம் ேதனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

எஸ்.பி. பிரவீன்உமேஷ்டோங்கரே உத்தரவின் பேரில் ஏ.எஸ்.பி. கார்த்திக் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில் 3 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

ரஞ்சிதத்துக்கு அழைப்பு விடுத்த எண் மற்றும் எந்த வங்கி கணக்கில் பரிமாறப்பட்டது என விசாரணை நடத்தியதில் டெல்லியை சேர்ந்த 3 பேர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து டெல்லிக்கு சென்ற போலீசார் வில்சன்குமார் (27), முருகன் (26), சதாசிவம் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், வங்கி புத்தகம், ரொக்க பணம் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் ஆகியவற்றை கைப்பற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com