search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வியாபாரியை தாக்கிய கும்பல்

    புதுவையில் பிரியாணி கடையை சூறையாடி வியாபாரியை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை குயவர்பாளையம் சுபாஷ்சந்திரபோஸ் வீதியை சேர்ந்தவர் வேலு(43). இவர் புதுவை காமராஜர் சாலையில் பல ஆண்டுகளாக பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வேலு பிரியாணி கடையில் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு கடையில் வேலை பார்க்கும் மணி என்ற கணேசன், மோகன், புருசோத்தம்மன் மற்றும்  அவர்களது நண்பர்கள் சிலர் பிரியாணி கடைக்கு வந்தனர். அவர்கள் நாங்கள் பிறந்தநாள் விழா கொண்டாட உள்ளோம். 

    எனவே பிரியாணி வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு வேலு சிறிது நேரம்  பொறுத்திருங்கள். பிரியாணி தயார் செய்து பார்சல் கட்டி தருகிறேன் என்றார். ஆனால் அவர்கள் உடனடியாக எங்களுக்கு பிரியாணி வேண்டும் என்று வேலுவிடம் தகராறு செய்தனர். 

    அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் மோகன் என்பவர் அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து வேலுவை தாக்கினார்.

    மேலும் மணி தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேலுவை குத்தி கொலை செய்து விடுவதாக  மிரட்டினார்.
    அதோடு அவர்களுடன் வந்தவர்கள் பிரியாணிக்கடையில் இருந்து தட்டுக்கள் மற்றும் அடுப்பை அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள். நாற்காலிகளை தூக்கி வீசி பிரியாணிக் கடையை சூறையாடியதுடன் மீண்டும் வேலுவை தாக்கினர்.

    இதனால் வலி தாங்காமல் வேலு அலறவே பிரியாணிக்கடையில் இருந்தவர்களும் மற்ற கடைக்காரர்களும் திரண்டு வந்தனர்.  இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

    இந்த தாக்குதலில் காயமடைந்த வேலு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாணிக் கடையை சூறையாடி வியாபாரியை தாக்கிய கும்பலை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×