search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி அலுவலகத்திற்கு தவழ்ந்து வந்த மாற்றுத்திறனாளியிடம்  கமிஷனர் விஷ்ணு சந்திரன் மனு வாங்கிய காட்சி.
    X
    மாநகராட்சி அலுவலகத்திற்கு தவழ்ந்து வந்த மாற்றுத்திறனாளியிடம் கமிஷனர் விஷ்ணு சந்திரன் மனு வாங்கிய காட்சி.

    நெல்லை ஸ்ரீபுரம் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- மாநகராட்சி கமிஷனரிடம் வியாபாரிகள் மனு

    நெல்லை ஸ்ரீபுரம் சாலை பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி கமிஷனரிடம் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
     
    மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மாநகராட்சி பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    தச்சநல்லூர் கிராண்ட் புதுத் தெருவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மகாராஜன் மனு அளிப்பதற்காக தவழ்ந்தபடி கூட்டத்திற்கு வந்திருந்தார். உடனே கமிஷனர் விஷ்ணு சந்திரன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று அவரிடம் கோரிக்கை மனுவை பெற்றார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கு இரண்டு கால்களும் கிடையாது. எனது மனைவிக்கு வாய் பேசமுடியாது. இதனால் எங்களது குழந்தைகளை வளர்ப்பதற்கு வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

    எனவே மாநகராட்சி மேயர் நடவடிக்கை எடுத்து எனக்கு ஒரு பெட்டிக்கடை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த மனுவை ஆய்வு செய்த கமிஷனர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

     உதயம் வெங்கடேஸ்வரா நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வண்ணார்பேட்டை வடக்கு புற வழிச்சாலை உடையார்பட்டி பகுதியில் உள்ள யூ.வி. நகர் பகுதியில் பூங்காக்கள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை மற்றும் இணைப்பு சாலை பணிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.

    அண்ணாமலை புதூர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் அளித்த மனுவில் பேட்டை பகுதி அண்ணாமலை புதூரில் பூங்கா அமைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
     ஆனால் அது முறையாக பராமரிக்கப்படாததால் அந்த இடத்தில் முட்செடிகள் வளர்ந்து விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. எனவே விரைவில் அந்த முள் செடிகளை அகற்றி விட்டு பூங்கா அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

    தச்சை மண்டலம் பாலபாக்யா நகர் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் அளித்த மனுவில் பாலபாக்யா நகர் தெரு விளக்குகள் சரியாக எரியவில்லை. மேலும் பெரும்பாலான வீடுகளில் கதை விளக்கம் சரியாக தெரியவில்லை.

    இதனால் தபால் கொண்டு வரும் தபால்காரர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதேபோல் ஒவ்வொரு தெருவுக்கும் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று கூறிவந்தனர்.

    நெல்லை சந்திப்பு எஸ்என் ஹை ரோடு வியாபாரிகள் சங்கத்தினர் அளித்த மனுவில் சந்திப்பு ஸ்ரீ புரத்தில் உள்ள சிவசக்தி சாலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த சாலையில் ஏராளமான வியாபாரிகள் உள்ளனர். குழாய் பதிக்கும் பணி இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. எனவே வணிகர்களின் நலன் காப்பதற்கு இந்த பணிகளை விரைவில் முடித்து சாலை அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

     நெல்லை மாநகர் சந்திப்பு பகுதி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் அளித்த மனுவில், சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் அனைத்து பஸ்களும் வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
    Next Story
    ×